சாயல்குடி. நவ. 13: சாயல்குடி அருகே இதம்பாடல் கிராமத்தில் பேருந்து நிறுத்த கட்டிடம் இடிந்து கிடப்பதால் புதிய நிழற்குடை கட்டி தரவேண்டும் என கிராமமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியம் இதம்பாடல் கிராமத்தில் 900க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இதம்பாடல்-உத்திரகோசமங்கை சாலையில் உள்ள முக்கிய தெருக்களின் சந்திப்புகளின் இரண்டு பேருந்து நிழற்குடைகள் கட்டப்பட்டது. ஆண்டுகள் கடந்ததால் கட்டிடம் முழுமையாக சேதமடைந்து இடிந்து கிடக்கிறது.தற்போது மழை சீசன் தொடங்கி விட்டதால் பள்ளி, கல்லூரிக்கு வெளியூர் செல்ல பேருந்து நிறுத்தம் வருவோர் மழை மற்றும் வெயிலில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. மருத்துவமனை செல்லும் கர்ப்பிணி பெண்கள், முதியோர், நோயாளிகள் உட்கார இடமின்றி சாலையோரத்தில் உட்காரும் அவலம் உள்ளது. நிழற்குடை இடிந்து கிடப்பதால் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வருவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே புதியதாக நிழற்குடை கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.