ஆர்.எஸ்.மங்கலம், அக்.18: நில உடைமைகளில் ஏற்பட்டுள்ள பிழைகளை தாசில்தாரே நேரடியாக திருத்தம் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை தாலுகாவில் இருந்து பிரித்து 35 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சியை உள்ளடக்கி புதிய தாலுகா உருவாக்கப்பட்டு தனி தாலுகாவாக செயல்பட்டு வருகின்றது. இதில் ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர், சோழந்தூர் என மூன்று வருவாய் பிர்க்காகள் உள்ளனர். இதில் உள்ள விவசாய பொதுமக்கள் ஏற்கனவே மேனுவல் ரெக்கார்டுகளாக அந்தந்த வருவாய் கிராமங்களின் உள்ள நில உடைமைகள் 10 (1) அடங்கல், பட்டா, சிட்டா ஆகியவற்றை அந்த குரூப்பில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக பராமரிக்கப்பட்டு வந்தனர். இதனை கணினி மயமாக்குகின்றோம் என்று கூறி அனைத்து நில உடைமைகளின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தனர். இதில் ஏராளமான குளறுபடிகள் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. உதாரணமாக கிராம நிர்வாக அலுவலரின் புத்தகத்தில் உள்ள கணக்கில் உள்ள நிலை உரிமையாளரின் பெயருக்கு பதிலாக கணினியில் வேறு ஒருவருடைய பெயர் இருக்கின்றது. இது பெரும்பாலான ஏழை பாமர விவசாயிகளுக்கு இது புரியாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். காரணம் நம்முடைய நிலத்தில் நாம் தானே விவசாயம் செய்கிறோம் என நினைத்து மெத்தனமாக இருந்து விடுகின்றனர். தங்களுடைய நிலத்தின் பெயரில் வங்கி கடன் வாங்க செல்லும் பொழுதோ, பயிர் காப்பீடு செய்யப் போகும் பொழுதோ, அல்லது தனது சொத்தை அவசரத் தேவைக்காக விற்பனை செய்ய போகின்ற பொழுதுதான் கணினி10 (1) கேட்கின்றார்கள். அப்பொழுது சென்று பார்க்கும் பொழுதுதான் தன்னுடைய சொத்து மற்ற ஒருவர் பெயரில் இருப்பது தெரிய வருகின்றது. இதுபற்றி தாலுகா அலுவலகத்திற்கு சென்று கேட்டால் இதனை திருத்தம் செய்ய எங்களுக்கு பவர் இல்லை என கூறி கோட்டாச்சியரிடம் மனு கொடுக்க சொல்லி தட்டி கழித்து விடுகின்றனர்.