பண்ருட்டி, அக். 18: பண்ருட்டி அருகே திருவாமூரில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால் அவ்வழியாக செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பண்ருட்டி அருகே திருவாமூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு காமாட்சிபேட்டை, சமத்துவபுரம், திடீர்குப்பம், சோமாசிப்பாளையம், மணலூர், கிழக்கு மருதூர் ஆகிய கிராமங்களிலிருந்து மாணவ-மாணவிகள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு வருவதற்கான சாலையில் எப்போதுமே தண்ணீர் தேங்கி கிடக்கும். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தும் தேங்கிக் கிடக்கும் நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இந்நிலையில் இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களிலிருந்து கல்வி கற்க வருவதால் இச்சாலை வழியாக நடந்தே வருகின்றனர். தற்போது இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பள்ளி செல்லும் சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையில் சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.