சிஎன் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றக்கோரி கையெழுத்து இயக்கம்

ஈரோடு, அக்.17: சிஎன் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றக்கோரி மாணவர்கள் சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரி (சிஎன்சி) பாரதியார் பல்கலைக்கழக மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள், பேராசிரியர்கள், அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகும் அரசு கல்லூரியாக அறிவிக்க தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. சிஎன் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உறுதியளித்த போதிலும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கோபிகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் சிஎன் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி மாணவர்களிடம் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கையெழுத்து பெறப்பட்ட நகல்கள் அனைத்தும் உயர்கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிஎன் கல்லூரி கிளை செயலாளர் நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: