திண்டுக்கல், அக். 17:திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2013 ஏப்ரல் 23ம் தேதி பான்மசாலா, வாயில் மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இப்பொருட்களை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2013 ஜூன் மாதத்துடன் விற்பனை செய்யக் கூடாது என அப்போதைய கலெக்டர் அறிக்கை விடுத்திருந்தார். ஆனால், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இவற்றின் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் பறிமுதல் செய்ய உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய அலுவலர்கள் இல்லாததால் அதிரடி ரெய்ட் நடத்த இத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். சிகரெட், பீடியைக் காட்டிலும் 28 சதவீதம் பான் மசாலா மற்றும் வாயில் மெல்லும் புகையிலையால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மாநில அளவில் 13 சதவீதம் பேர் இப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தற்போது பள்ளி, கல்லூரியில் படிப்பவர்களிடம் புகையிலை பொருட்கள் புழக்கம் அதிமாகி வருகிறது. தடை விதிக்கும் போது கடைகளில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், தற்போது இதன் விற்பனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.