காடையாடம்பட்டி, அக்.17: மாணவர்கள் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி வந்த பென்னாகரம் வாலிபரை சினிமா பாணியில் தீவட்டிப்பட்டி போலீசார் மடக்கி பிடித்தனர்.ஈரோடு பகுதியில் இருந்து நேற்று மாலை சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம் வழியாக ஒரு கார் மின்னல் வேகத்தில் வந்துள்ளது. தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியில் வரும்போது அந்த பகுதியில் பள்ளி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 மாணவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனைக்கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் டூவீலர்களில் துரத்திச்சென்றனர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. வழியில் மேலும் பல வாகனங்கள் மீது மோதியவாறு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் காவல்நிலையம் முன் தடுப்பு ஏற்படுத்தி சேலம்- பெங்களூரு சாலையில் வாகன தணிக்கையை முடுக்கி விட்டனர். இதற்காக அப்பகுதியில் சுமார் 200 மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்த நிலையில், குறிப்பிட்ட அந்த கார் சாலையோரம் புதர் பகுதியை கடந்தவாறு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே, மற்ற வாகனங்களை குறுக்கே நிறுத்தியவாறு அந்த காரை மடக்கி பிடித்தனர்.