வாலாஜாபாத், அக்.16: வாலாஜாபாத் ஒன்றியம் வெண்குடி கிராமத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல் சமுதாய நலக்கூடம் பூட்டியே கிடக்கிறது. இதை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது எப்போது என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்துகிடக்கின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்டது, வெண்குடி கிராமம். இந்த கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த ஊராட்சி மக்கள், தங்களது குடும்பத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள், காத்து குத்து விழா, மஞ்சள் நீராட்டு விழா, வளைகாப்பு உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமானால், சுமார் 5 கிமீ தூரம் உள்ள வாலாஜாபாத் பகுதியில் தனியார் திருமண மண்டபங்களில் நடத்துகின்றனர். இதனால், பண விரயமும், நேர விரயமும் அதிகமாகிறது.இதையொட்டி, தங்களது பகுதியிலேயே சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் சமுதாயக் கூடம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தினர்.இதைதொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வெண்குடி பகுதியில் ஒரு சமுதாய கூடம் கட்டப்பட்டது. இங்கு அடிப்படை வசதிகளான கழிப்பறை, சமையலறை, குடிநீர், உணவு பரிமாறும் பகுதி என எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இதனால், தற்போது இந்த சமுதாயக்கூடம் பயன்பாடின்றி மூடப்பட்டு கிடக்கிறது.