திருச்சி, அக்.15: திருச்சி மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து, நில அதிர்வு ஆகியவற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்க தங்களது தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்வது அவசியமாகும். இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்படும் பட்சத்தில் இத்திட்டதில் இழப்பீடு வழங்கப்படுகிறது.ஒரு ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து சரியான முன்மொழிவு அளிக்க வேண்டும்.தென்னை காப்பீடு செய்யம் விவசாயிகள் மரங்களில் வண்ணம் பூசி 1,2,3 என வரிசையாக இலக்கமிட வேண்டும். காப்பீடு பிரீமியத்தில் மானியத்தொகையாக மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் மாநில அரசு 25 சதவீதம் ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரீமியத்தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும்.நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள தென்னை மரங்களை மட்டுமே வயதுக்கேற்ப பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். 4 முதல் 15 வயது வரை உள்ள ஒரு தென்னை மரத்துக்கு விவசாயி செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ரூ.2.25. அதற்கான காப்பீட்டுத் தொகை ரூ.900. 16 முதல் 60 வயது வரை உள்ள தென்னை மரத்துக்கு ரூ.3.50 பிரீமியம் தொகை. அதற்கான காப்பீட்டு தொகை ரூ.1,750.