ஆர்.எஸ்.மங்கலம், செப்.17: திருப்பாலைக்குடி கிராமத்தில் தெருக்களில் சேகரித்து கொண்டு வரும் குப்பைகளை புதுக்குளம் ஊரணியில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அதனை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி ஊராட்சி மற்ற கிராம ஊராட்சிகளை விட மிகப் பெரிய ஊராட்சியாகும். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அரசு ஆரம்ப நிலையத்திற்கு பின்புறமாக உள்ள புதுக்குளம் என்ற ஊரணியில் தான் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். ஊராட்சியில் உள்ள அனைத்து குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுவதால், இப்பகுதி சுகாதாரமற்ற பகுதியாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். ஒரு பக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், மற்ற பக்கங்களில் அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி, ரேசன் கடை, நூலகம், விவசாய சங்க கட்டிடம், மீன் மார்க்கெட் மற்றும் சந்தை, காய்கறி மார்க்கெட் போன்றவை அமைந்துள்ளது.