ஓமலூர், செப்.17: ஓமலூர் ரயில்நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், அடிப்படை வசதியின்றி பயணிகள் தவித்து வருகின்றனர். ஓமலூரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் வழியாக சேலம், பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் சென்று வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினம்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சேலம், ஈரோடு, மேட்டூர், பெங்களூர், மும்பை, ஜோலார்பேட்டை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயிலில் சென்று வருகின்றனர். மேலும் 6 பயணிகள் ரயில் 12 முறை நின்று செல்கிறது. ஆனால், பயணிகளுக்கு அடிப்படை வசதியின்றி இருந்தது. இதனையடுத்து, பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரயில்வே நிலைய கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது.