சேதுபாவாசத்திரம், ஆக. 22: சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக மேய்ச்சல் தரிசாக மாறிய சாகுபடி நிலங்களில் இந்த ஆண்டாவது சம்பா சாகுபடி நடைபெறுமா என்று தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக போதுமான மழை இல்லாமலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராமலும் வழக்கமாக கடைமடை பகுதியில் பல வருடங்களாக நடந்து வந்த சம்பா சாகுபடி நடக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் சாகுபடி நிலங்கள் அனைத்தும் தரிசாக கிடக்கிறது. நெல் தவிர்த்து மாற்று பயிர் செய்வதற்கு 90 சதவீதம் நிலங்கள் மண்வளம் உகந்ததாக இல்லை.கடந்த 5 ஆண்டுக்கு மேலாக கடைமடையில் மழை வஞ்சித்து விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. சாகுபடி நிலங்கள் மேய்ச்சல் தரிசாக மாறி ஆடு, மாடுகள் மேய்ந்து திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டாவது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டெல்டா பகுதி சாகுபடிக்கு கல்லணை திறக்கப்பட்டுள்ளது. எனவே போதுமான தண்ணீர் கிடைத்து போதுமான மழை பெய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருபோக சம்பா சாகுபடி நடைபெறுமா என கடைமடை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.