திருவாரூர், ஆக.20 : திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெறுகிறது. இதில் 60 சதவீத குடிமராமத்து பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட திருநெய்ப்பேர் வாய்க்கால் தூர்வாரும் பணியினை நேற்று கலெக்டர் ஆனந்த் மற்றும் அமைச்சர் காமராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் ரூ.16 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திற்கு ஐஏஎஸ்அலுவலர் அரவிந்த் நியமிக்கப்பட்டு அனைத்து பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த குடிமராமத்து பணிகள் என்பது மாவட்டத்தில் இதுவரையில் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மேலும் வருடந்தோறும் நடைபெறும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.