வேடசந்தூர், ஜூலை 24: வடமதுரையில் கழிவுநீரை அகற்றும் பணி எந்த பாதுகாப்பு உபகரணமின்றி நடப்பதாக புகார் எழுந்தது.
வடமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்வில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. அண்ணாநகர் கூட்டுறவு சொசைட்டிக்கு அருகில் பள்ளம் ஏற்படுத்தி அதில் கழிவுநீர் தேங்கும் வகையில் அமைத்து உள்ளனர். இப்பள்ளத்தில் கழிவுநீர் நிறைந்தவுடன் வாளியில் எடுத்து வெளியில் ஊற்றும் வேலையை நாள்தோறும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் முன் மண் சாலையாக இருந்த போது கழிவுநீர் பூமிக்குள் சென்று விடும். தற்போது சிமெண்ட் சாலை அமைத்தவுடன் அனைத்து பகுதியில் இருந்தும் கழிவுநீர் முழுமையாக இப்பள்ளத்தில் தேங்கி விடுகிறது. இதனால் காலை, மாலை என இருநேரமும் கழிவுநீரை வெளியில் எடுத்து ஊற்றும் நிலை உள்ளது. இப்பணியை செய்யும் பெரியவருக்கு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கவில்லை.