உத்திரமேரூர், ஜூலை 23: உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. 2 மதகுகளை கொண்ட இந்த ஏரி பொது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மழை காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டினால், மதகுகள் வழியாக வெளியேறும் உபரிநீர் மூலம் வாடாதவூர் கிராமத்தில் உள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த நிலங்களில் நெல், கரும்பு, வேர்க்கடலை உள்பட பல்வேறு பயிர்களை சுழற்சி முறையில் விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். மேலும் கிராமத்தில் கால்நடைகள் மற்றும் கிராம மக்களின் மிக முக்கிய நீராதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. அதன் பின் ஏரியை தூர்வாரவோ அல்லது கால்வாய்களை பராமரிப்பதற்கோ பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் நாளடைவில் ஏரி தூர்ந்து, கரைகள் வலுவிழந்து, கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டன. இதனால் ஏரியில் மழைநீர் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் என்பது வாடாதவூர் கிராம மக்களின் கேள்விக்குறியாக மாறியது. விவசாயம் மட்டுமின்றி கடந்த ஆண்டு பருவமழைப் பொய்த்து போனதால் கிராமத்தில் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. இதையொட்டி, வாடாதவூர் கிராம மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர்.