கும்மிடிப்பூண்டி, ஜூலை 18: கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தில் தாமதமாக வந்த அரசு பேருந்தை பொதுமக்களுடன் இணைந்து மாணவர்கள் சிறைப்பிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம், மாநெல்லூர், பல்லவாடா, சூரப்பூண்டி, மாதர்பாக்கம் உள்ட்ட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களில் இருந்து சென்னை மற்றும் பொன்னேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகள் தொடர்பாக செல்பவர்கள், பாதிரிவேடு - பொன்னேரி தடத்தில் ஈகுவார்பாளையம் வழியாக வரும் (தடம் எண்: 112P) அரசு பேருந்தையே நம்பியுள்ளனர்.இப்பேருந்து கடந்த சில மாதங்களாக காலை, மாலை நேரங்களில் சரியான நேரத்துக்கு வராமல், மிக தாமதமாகவே வந்து செல்கின்றன. இதனால் ஏற்படும் தாமதத்தினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் ஈகுவார்பாளையத்துக்கு அரசு பேருந்து தாமதமாக வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி சாலையில் வந்த 2 அரசு பேருந்தை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடை பட்டது.