திருவள்ளூர், மே 22: திருவள்ளூர் அருகே இருளஞ்சேரி கிராமத்தில், அலோபதி சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த இருளஞ்சேரி கிராமத்தில், பேரம்பாக்கம் - தக்கோலம் சாலையில், போலி டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்துள்ளதாக மாவட்ட இணை இயக்குனர் இளங்கோவனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு அவர் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு கிளினிக் நடத்திவந்த அரக்கோணத்தை சேர்ந்த சாரதி(61) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், அவர் எந்த தகுதியும் இல்லாமல் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட இணை இயக்குனர் இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில், அவரை மப்பேடு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.