விருதுநகர், ஜன. 22: போதிய வரத்து இல்லாததால் விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு மூட்டைக்கு ரூ.1,000, பாசிப்பருப்பு ரூ.500 என விலை உயர்ந்துள்ளது. பாமாயில் டின்னுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் பகுதிகளில் பனிப்பொழிவால், பாசிப்பயறு சேதாரமாகி வருகிறது. மேலும், வரத்தும் குறைவாக உள்ளது. இதனால், விருதுநகர் மார்க்கெட்டில் பாசிப்பருப்பு மூட்டைக்கு ரூ.500 விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.5,500 விற்ற லைன் பாசிப்பயறு மூட்டை, இந்த வாரம் ரூ.6,000க்கும், கடந்த வாரம் ரூ.8,200க்கு விற்ற லைன் பாசிப்பருப்பு ரூ.8,700க்கும், கடந்த வாரம் ரூ.7,700க்கு விற்ற நாடு பாசிப்பருப்பு ரூ.8,200க்கு விற்பனையானது.
கர்நாடகா மாநிலம், குல்பர்க்காவில் இருந்து துவரை வரத்து குறைவாக இருப்பதால், துவரம்பருப்பு மூட்டைக்கு ரூ.1,000 வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.4,300க்கு விற்ற லைன் துவரை ரூ.5,300க்கும், ரூ.6,300க்கு விற்ற லைன் துவரம் பருப்பு ரூ.7,300க்கும், ரூ.5,800க்கும் விற்ற உடைசல் துவரம் பருப்பு ரூ.6,700க்கும் விற்பனையானது. பாமாயில் (15 கிலோ) டின் ரூ.1,025க்கும், கடலைப் பிண்ணாக்கு (100 கிலோ) மூட்டை ரூ.3,600க்கும் விற்பனையானது.