திருவள்ளூர், டிச. 7: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவர், அதே தெருவில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடை பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த 15 ஆயிரம், விற்பனைக்கு வைத்திருந்த சென்ட் பாட்டில்கள் உட்பட பேன்ஸி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: திருத்தணி நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (30). திருத்தணியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றார். இவரது மனைவி வாசவி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வீட்டினுள் புகுந்த மர்ம நபர், கத்தி முனையில் மிரட்டி, பீரோவில் இருந்த 5 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி, 60 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.