நாகை,டிச.6: சாகுபடி செய்யப்பட்ட நெல்வயல்களுக்கு நிவாரணம் வழங்க கோரி நாகையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கஜா புயலில் நாகை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் இந்த புயலில் திருமருகல் ஒன்றியமும் பாதிக்கப்பட்டுள்ளதால் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும், சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நாகை-சீர்காழி சாலையில் வாஞ்சூர் ரவுண்டானாவில் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டத்தில் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் இளஞ்செழயன், பொது குழு உறுப்பினர் மணிவண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி, காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் கலையரசன் உள்ளிட்ட 500 பேர் கலந்து கொண்டனர். சாலை மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் நாகை-சீர்காழி சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.