உளுந்தூர்பேட்டை, டிச. 6: விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி மகன் மதன்ராஜ்(36). இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஒரு வழக்கு தொடர்பாக உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். காவலர் குடியிருப்பு அருகில் செல்லும் போது அங்கு வந்த பண்ருட்டியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சாமுவேல்(39) மற்றும் அவருடன் வந்த உளுந்தாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் அருள்(35) ஆகிய இரண்டு பேரும் முன்விரோதம் காரணமாக அசிங்கமாக திட்டி ஆசிரியர் மதன்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்னை தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் மதன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.