கஜா புயல் பாதிப்பு எதிர்கொள்ள 5 அதிவிரைவு படை தயார்

திருவள்ளூர், நவ. 14: கஜா புயல் நாளை (15ம் தேதி) கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும். அப்போது தமிழகம் முழுவதும் மிதமானது முதல் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட எஸ்பி., பொன்னி பார்வையிட்டார்.  பின்னர் அவர் கூறுகையில், மாநில பேரிடர் மீட்புகுழு பயிற்சி பெற்ற 33 காவலர்களுக்கு அவசர காலத்தில் விரைந்து செயல்படுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இடர்பாடுகள் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏதுவாக திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 5 இடங்களில், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட 5 அதிவிரைவுப்படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள், 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் உள்ளனர். மேலும், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில்  ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 2 ஷிப்டுகளில் காவல் கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. பொதுமக்கள் 044 27663422 என்ற தொலைபேசி எண்ணில் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மாவட்டத்தில் மொத்தம் 28 கடலோர கிராமங்களும், 56 தாழ்நிலை பகுதிகளும் கண்டறியப்பட்டு, இடர்காலங்களில் பொதுமக்களை உடனடியாக வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.  மாவட்டம் முழுவதும் சுமார் 2297 தன்னார்வலர்கள் அவரவர் பகுதிகளில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க கண்டறியப்பட்டு அவர்கள் அந்தந்த டிஎஸ்பி தொடர்பில் உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கஜா புயலை எதிர்கொள்ள அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: