ஸ்ரீபெரும்புதூர், நவ.8: குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு கிராம மக்கள் சார்பில், தங்களது பகுதிக்கு இயக்கப்படும் 2 அரசு பஸ்களுக்கு ஆயுதப்பூஜை கொண்டாடினர். குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் நடுவீரப்பட்டு, தர்காஸ், எட்டியாபுரம், அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், ராம்ஜி நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர், மரகதம் நகர் ஆகிய பகுதியில் 2000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.மேற்கண்ட பகுதியில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக 2 மாநகர பஸ் (தஎ 18எச்) இயக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் ஊராட்சி தலைவர் சாதனா சீனிவாசன் தலைமையில், நடுவீரப்பட்டு மக்கள் இணைந்து நேற்று ஆயுதப்பூஜை கொண்டாடினர். அப்போது, 2 மாநகர பஸ்களையும் மலர்களை கட்டி, வாழை மரம், மா இலைகளை வைத்து அலங்கரித்து விழா கொண்டாடபட்டது. மேலும் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.