கடலூர், அக். 16: கடலூர் மாவட்டத்தில் மீன் வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 39 ஏரிகளில் மீன் வளர்த்திட வரும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஏலம் விடப்படுவதாக ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது செய்திகுறிப்பு:கடலூர் மாவட்டம் மீன் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நான்கிற்கு முன்னுரிமை அடிப்படையில் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஏரிகளுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் வருகிற 29ம் தேதி மாலை 5 மணி வரை கடலூர், மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகிறது. இந்த டெண்டர்கள் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பிரித்து அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு குத்தகை உரிமை வழங்கப்படவுள்ளது. கடலூர் வட்டத்தில் உள்ள மேலக்கொளக்குடி ஏரி, கொண்டங்கி ஏரி, பெருமாள் ஏரி, குறிஞ்சிப்பாடி பெரிய ஏரி, சிதம்பரம் வட்டத்தில் உள்ள சூடாமணி ஏரி, சொக்கன்கொல்லை ஏரி, குமுடிமூலை ஏரி, சாத்தப்பாடி ஏரி, மதுவான மேடு ஏரி, வாலாஜா ஏரி, பண்ருட்டி வட்டத்தில் உள்ள சிறுவத்தூர் ஏரி, சிறுகிராமம் ஏரி, வீரபெருமா நல்லூர் ஏரிகளுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி காலை 11 மணியளவில் ஏலம் நடைபெற உள்ளது.