டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருட்டு 3 பேர் அதிரடி கைது

நெய்வேலி, அக். 16: நெய்வேலி வட்டம் 2ல் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையில் விற்பனையை முடித்துவிட்டு விற்பனையாளர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததுடன், கடையில் இருந்த ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் கமலநாதன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வடக்கிருப்பு மேற்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாண்டியன் (18), தெற்கிருப்பு கிழக்கு தெரு தனவேல் மகன் குற்றாலீஸ்வரன் (21), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் டாஸ்மாக் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது.

 3 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய மாணவர் கைது

சிதம்பரம், அக். 16: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய பி.எச்டி மாணவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை அம்மன் நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். திருமணமானவர். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு இதே பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்து வரும் சிதம்பரம் சம்பந்தக்கார தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் வேலாயுதம் (26) என்பவர் அடிக்கடி ஆபாச படம் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பி வந்துள்ளார். ேமலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் வாட்ஸ்அப் டிபியில் உள்ள அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து தனது நண்பர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியதாகவும் தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து வேலாயுதத்தை கைது செய்தனர். இச்சம்பவம் மாணவ, மாணவிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: