ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தகராறில் விவசாயிக்கு சரமாரி வெட்டு

ஒரத்தநாடு, அக். 11:  ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தகராறில் விவசாயியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் பகுதியில் உள்ள வயலில்  திருச்சி லால்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்த கணேசன் மகன் முத்தையா (27) என்பவர்  ஆட்டு பட்டி அமைத்து 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்த்து  வருகிறார்.  இதே பகுதியில்  ராமநாதபுரம் முதுகுளத்தூரை சேர்ந்த  மூர்த்தி (49), திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த பிரபாகரன் (23)  ஆகியோரும்  தனித்தனியாக பட்டி அமைத்து ஆடு மேய்த்து வருகின்றனர்.  பிரபாகரனும், மூர்த்தியும் இணைந்தும், முத்தையா தனியாகவும் ஆடு மேய்ப்பது  வழக்கம்.  இரவு நேரங்களில் 3 பேரின் ஆடுகளும் பட்டி மாறி அடைந்துவிடும்.  இதனால் முத்தையாவுக்கும், மூர்த்தி, பிரபாகரன் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மூர்த்தியின் ஆடுகள்  முத்தையாவின் பட்டிக்குள் அடைந்துவிட்டது. இதனால் மூர்த்தி வந்து  முத்தையாவிடம் எனது ஆடுகளை ஏன் அடைத்தாய் என்று தகராறில் ஈடுபட்டார்.  அப்போது முத்தையாவை இருவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இந்நிலையில்  அந்த வழியாக வந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்தையாவை மீட்டு  தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அவர் புகாரின்பேரில்  ஒரத்தநாடு போலீசார்   கொலை முயற்சி வழக்குப்பதிந்து பிரபாகரன், மூர்த்தியை கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 2 பேரையும் சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories: