ஈரோடு, அக். 5: திம்பம் மலைப்பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்டது.சத்தியமங்கலத்தையும் கர்நாடக மாநிலத்தையும் இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பண்ணாரியில் இருந்து திம்பம் செல்ல 27 கொண்டை ஊசி வளைவு உள்ளது. இந்த கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலாக இருப்பதால் அதிக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன. இதனால் இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல மணி நேரம் முடங்கி விடுவது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக தமிழக, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அப்போது, அதிக பாரம் கொண்ட லாரிகளை மலைமேல் செல்ல தடை விதிப்பது, மாற்றுப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டது.