கேளம்பாக்கம் அருகே வட மாநில வாலிபர் கழுத்தறுத்து கொலை

திருப்போரூர். கேளம்பாக்கம் அருகே தையூரில் காளியம்மன் கோயில் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இங்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் சௌத்ரி (38) என்ற வாலிபர் வேலை பார்த்து வந்தார்.

இவர் அதே தெருவில் இருந்த சசிகுமார் என்பவரின் வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்தார். இதே குடியிருப்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புதுப்பாக்கம் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த மற்றொரு வாலிபரும் தங்கி இருந்தார். இருவரும் ஒரே மாநிலம் என்பதால் நெருங்கிப் பழகினர். இந்நிலையில் கடந்த 5 நாட்களாக இருவரின் வீடும் பூட்டிக்கிடந்தது. நேற்று மாலை 4 மணியளவில் அனில் சௌத்ரி தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சசிகுமார் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து பூட்டை உடைத்து திறந்து பார்த்தனர்.

அங்கு அனில் சௌத்ரி கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவம் நடைபெற்ற 4 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் உடல் முழுவதும் அழுகி கிடந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அருகிருந்த அறையில் தங்கியிருந்த வாலிபர் யார், அவர் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.   விசாரணையில், அவர் புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதும், இருவரும் ஒன்றாக அமர்ந்து தினமும் மது அருந்துவர் என்பதும் தெரியவந்தது. பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை நடந்த அறையில் இருந்து கத்தி, ரத்தக்கறை படிந்த சட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றி மேலும் விசாரித்து வருகின்றனர். 

Related Stories: