மஞ்சூர் வழித்தடத்தில் பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி, செப். 12: ஊட்டியில்  இருந்து மஞ்சூர் வழித்தடத்தில் கோவைக்கு இயக்கப்படும் அரசு பஸ், மாலை  நேரத்தில் காந்திபுரம் சென்று திரும்புவதால், இரவு யானைகளிடம் இருந்து  தப்பித்து வருவதற்குள் மிகவும் காலதாமதம் ஏற்பட்டு கிராமப்புறங்களுக்கு  செல்லும் பயணிகள் வாகனங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஊட்டியில்  இருந்து மஞ்சூர் வழித்தடத்தில் கோவைக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு  வருகிறது. இதில், ஊட்டியில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்கு கோவையில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும்.  அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி,  கெத்தை வழியாக மஞ்சூர் பகுதிக்கு இரவு 10 மணிக்கு இந்த பஸ் வருவது வழக்கம்.  இந்த  வழித்தடத்தில் வெள்ளியங்காடு முதல் ஒணிக்கண்டி வரையில் சுமார் 40 கிலோ  மீட்டர் இடைப்பட்ட பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டதால், இரவு நேரங்களில்  யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். சில சமயங்களில் இந்த யானைகள்  சாலையில் நின்றுக் கொண்டு வாகனங்களை செல்ல விடாமல் தடுப்பது வழக்கம். இதனால்,  பெரும்பாலான நாட்கள் இந்த பஸ் மிகவும் தாமதமாகவே மஞ்சூர் பகுதிக்கு வருகிறது. இதனால், மஞ்சூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்கள்  பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக இந்த பஸ் கோவை காந்திபுரம் வரை செல்ல  போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளில்  இருந்து செல்லும் பயணிகளை இறக்கிவிட்ட பின், கவுண்டம்பாளையம் பகுதியில்  உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிக் ெகாண்டு  கீழ்குந்தாவிற்கு வருகிறது. காந்திபுரம் சென்று திரும்பும் நிலையில்,  சிக்னல்களை தாண்டி கவுண்டம்பாளையம் வருவதற்குள் மாலை 6 மணிக்கு மேல்  ஆகிறது. பின், அங்கிருந்து கிளம்பும் பஸ் காரமடை ரயில்வே கேட்டுக்களை  எல்லாம் தாண்டி மஞ்சூர் வருவதற்குள் இரவு 10 மணிக்கு மேலாகிறது. இதனால்,  மஞ்சூரை சுற்றியுள்ள மேல்குந்தா, தொட்டக்கொம்பை, தாய்சோலை, கரியமலை,  முள்ளிமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வாகனங்கள் கிடைக்காமல்  கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன்  கருதி போக்குவரத்து கழகம் வழக்கம் போல், மாலை 5.30 மணிக்கு கவுண்டம்பாளையம்  பஸ் நிலையத்தில் இருந்து கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  காந்திபுரம் செல்வதற்கு இந்த பஸ்சிற்கு மட்டும் விதி  விலக்கு அளிக்க வேண்டும் என மஞ்சூர் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: