ஊட்டி, செப். 12: ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழித்தடத்தில் கோவைக்கு இயக்கப்படும் அரசு பஸ், மாலை நேரத்தில் காந்திபுரம் சென்று திரும்புவதால், இரவு யானைகளிடம் இருந்து தப்பித்து வருவதற்குள் மிகவும் காலதாமதம் ஏற்பட்டு கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் வாகனங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழித்தடத்தில் கோவைக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில், ஊட்டியில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்கு கோவையில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும். அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை வழியாக மஞ்சூர் பகுதிக்கு இரவு 10 மணிக்கு இந்த பஸ் வருவது வழக்கம். இந்த வழித்தடத்தில் வெள்ளியங்காடு முதல் ஒணிக்கண்டி வரையில் சுமார் 40 கிலோ மீட்டர் இடைப்பட்ட பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டதால், இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். சில சமயங்களில் இந்த யானைகள் சாலையில் நின்றுக் கொண்டு வாகனங்களை செல்ல விடாமல் தடுப்பது வழக்கம். இதனால், பெரும்பாலான நாட்கள் இந்த பஸ் மிகவும் தாமதமாகவே மஞ்சூர் பகுதிக்கு வருகிறது. இதனால், மஞ்சூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு செல்லும் மக்கள் பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.