அந்தியூர், செப். 11: அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் ஊராட்சிகுட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 4நாட்களுக்கு மேலாக மின் மோட்டார் பழுதினால் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று காலை எண்ணமங்கலத்தில் இருந்து கோவிலூர் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவயிடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேலிடம் இன்ஸ்பெக்டர் ரவி செல்போனில் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்னை குறித்து பேசி, மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தார்.