சிவகாசி, செப். 7: சிவகாசி அருகே மீனம்பட்டியில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டி கிராமத்தில் நியாய விலை கடை உள்ளது. இக்கடையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல்கள் விழுந்தும், காரைகள் பெயர்ந்தும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் தான் அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர்.