தென்கிழக்கு அரபிக் கடலில் புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம், டெல்டா மற்றும் காரைக்கால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூரில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் புயலாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.

வரும் 16ஆம் தேதியன்று புயல் வலுப்பெற்று குஜராத் மற்றும் பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: