திட்டுக்கல் செல்லும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

 

ஊட்டி, ஏப். 20: ஊட்டியில் இருந்து தீட்டுக்கல் செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் தீட்டுக்கல் பகுதி உள்ளது. இப்பகுதி வழியாகவே பார்சன்ஸ் வேலி மற்றும் போர்த்திமந்து ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

இதுதவிர, ஏராளமான பழங்குடியினர் மக்கள் செல்லும் முக்கிய சாலையாக இச்சாலை உள்ளது. ஆனால், இச்சாலையில் ஊட்டி படகு இல்லம் முதல் தீட்டுக்கல் குப்பை குழி வரை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இவ்வழித்தடத்தில் செல்பவர்கள் இந்த பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி தீட்டுக்கல் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திட்டுக்கல் செல்லும் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: