செய்யூரில் 2வது நாளாக வாகன விபத்து பைக் மீது மணல் லாரி மோதி வாலிபர் பலி

செய்யூர், ஏப்.18: செய்யூர் அருகே மணல் லாரி மோதியதில் வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை கண்டித்து, கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2வது நாளாக விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் நடத்திய மறியலால், செய்யூர் அருகே, பெரும் பரபரப்பு நிலவியது.சித்தாமூர் அருகே தொன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (26). தனியார் தொழிற்சாலை ஊழியர். செய்யூர் அடுத்த நாகமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் லோகநாதன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை லோகநாதன், பால் வாங்குவதற்காக பைக்கில் கடைக்கு புறப்பட்டார். அப்போது, எதிரில் கல்குவாரியில் இருந்து வந்த டாரஸ் லாரி, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்தை லோகநாதனை, அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு,  செய்யூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் இறந்தார்.

புகாரின்படி செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் செய்யூர் தாலுகா அலுவலகம் அருகே லட்சுமி என்ற பெண், மணல் லாரி மோதி உடல் நசுங்கி இறந்தார். இதுதொடர்பாக பொதுக்கள் நேற்று 2வது நாளாக போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  இந்தவேளையில், ேநற்று காலை அதே பகுதியில் வாலிபர் லோகநாதன், மணல் லாரி மோதி இறந்ததை கண்டித்து, கிராம மக்கள் 100க்கு மேற்பட்டோர், செய்யூர் -சித்தாமூர் செல்லும் சாலை, ஓணம்பாக்கம் பகுதியில் மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து செய்யூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என பொதுமக்கள், வாக்குவாதம் செய்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். செய்யூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  மீண்டும் விபத்து ஏற்பட்டு வாலிபர் பலியான சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: