தோலைமலை ஒன்றியத்துக்கு தொழிற் கூட்டுறவு சங்கத்திலிருந்து பள்ளி சீருடைகள் அனுப்பிவைப்பு

கரூர்: கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற் கூட்டுறவு சங்கத்தில் இருந்து தோகைமலை ஒன்றியத்துக்கு தேவையான பள்ளி சீருடைகள் அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்டம் வாங்கப்பாளையத்தில் கடந்த 94ம் ஆண்டு முதல் சமூக நலத்துறையின் சார்பில், கரூர் தையல் மற்றும் சார்புத் தொழில்கள் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடைகள் தைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவர்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடைகள் தைக்கப்பட்டு, இந்த நிறுவனம் மூலம் அனைத்து ஒன்றியங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய நிறத்தில் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தற்போது தோகைமலை ஒன்றியத்துக்கு தேவையான 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடைகள் தயார் செய்யப்பட்டு நேற்று வேனில் ஏற்றப்பட்டன. விரைவில் அடுத்தடுத்து ஒன்றியங்களுக்கும் சீருடைகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: