பொதுமக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் வரி இனங்களை எளிமையாக செலுத்த “க்யூ ஆர் கோடு’’

தஞ்சாவூர், ஏப்.4: பொதுமக்கள் எளிய முறையில், வீட்டில் இருந்தபடியே சொத்து வரி, குடிநீர் வரி போன்ற பல்வேறு வரி இனங்களை செலுத்துவதற்காக ‘க்யூ ஆர் கோடு’ என்ற எளிய முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. இது பொதுமக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். தற்போது உள்ள தொழில்நுட்ப யுகத்தில் எங்கு சென்று வணிகம் செய்தாலும், பண பரிவர்த்தனை செய்தாலும் அதில் முக்கியத்துவம் வகிப்பது க்யூ ஆர் கோடு தான். இந்த டிஜிட்டல் தொழில் நுட்பம் பொதுமக்களுக்கு எல்லா வகையிலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஒரு கடைக்கு சென்று உணவருந்தினாலோ அல்லது, பொருட்கள் வாங்கினாலோ நாம் சரியாக சில்லரை பணம் கொடுக்க முடியாது. ஆனால், தற்போது இந்த ‘க்யூ ஆர் கோடு’ பயன்படுத்தி அனைவரும் ஆன்ட்ராய்டு செல்போன் மூலம் வர்த்தகத்தை எளிய முறையில் முடிக்க முடிகிறது.

தமிழ்நாடு அரசு இந்த டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின்கீழ் பல்வேறு வரிகள் செலுத்தவும் புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த க்யூ ஆர் கோடில் வீட்டின் உரிமையாளர் முகவரி மற்றும் அவரது செல்போன் அனைத்தும் பதிவாகி இருக்கும். எனவே, மாநகராட்சி பகுதியில் வரி இனங்களை பொதுமக்கள் எவ்வித சிரமம் இன்றி செலுத்தலாம். இவை அனைத்தும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும். இது பொதுமக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். தஞ்சாவூர் நகராட்சி பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் டிஜிட்டல் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்டிக்கர் ஒட்டும் பணி நேற்று துவங்கியது. அதன்படி, மெடிக்கல் காலேஜ் அருகே உள்ள 47-வது வார்டு கூட்டுறவு காலனியில் முதல் கட்டமாக ‘க்யூ ஆர் கோடு’ ஒட்டும் பணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த கியூ ஆர் கோடு மூலம் தஞ்சை மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை, வீட்டு வரியை வீட்டில் இருந்தபடியே செலுத்த முடியும். கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களையும் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே செய்யமுடியும். இது தஞ்சை மாநகராட்சி மற்றும் சென்னை தலைமை செயலகத்தில் கண்காணிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், உரிமம் பெறுவதற்கும், உரிமம் புதுப்பிப்பதற்கும் ஏற்படும் காலதாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலமாக உடனடியாக சேவைகளை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதை நடைமுறைப்படுத்தும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் ஒரு மாதத்திற்குள் இந்த பணி முடிக்கப்படும், என்றார்.

The post பொதுமக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் வரி இனங்களை எளிமையாக செலுத்த “க்யூ ஆர் கோடு’’ appeared first on Dinakaran.

Related Stories: