திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இணையதளம் உருவாக்கம்

 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில், வேளாண்மை அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணைய தளம் மூலமாக அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை, உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் பல்வேறு துறைகள் இணைக்கப்பட உள்ளது.

விவசாயிகளின் விவரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால், வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக, ஆவணங்களை சமர்பிக்காமல் எளிதில் விவசாயிகள் விண்ணப்பிக்கும் வகையில், கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதில் பதிவு செய்ய ஆதார் அட்டை, செல்போன் எண், புகைப்படம், வங்கி கணக்கு விவரம், நில விவரங்கள் இந்த திட்டத்தில் ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

The post திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இணையதளம் உருவாக்கம் appeared first on Dinakaran.

Related Stories: