சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவினர் கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு

 

கோவை, ஜூன் 15: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்குக் குழுவினர் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமையிலான குழு, நேற்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.  பின்னர் செல்வபெருந்தகை எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோவை அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ கருவி 90 நாட்களுக்குள் பொருத்தவில்லை என்ற தகவல் வந்ததன் அடிப்படையில் ஆய்வு செய்தோம். ஆய்வில் கருவி வாங்கிய 90 நாட்களுக்குள் பொருத்தப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையை செப்பனிடும் பணி, பராமரிப்பு பணி நடைபெறுகிறது. மேலும் ஏராளமான நோயாளிகள் வருவதால் இம்மருத்துவமனைக்கு தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும். அரசு மருத்துவமனை சார்பில் கேட்கும் நிதியை உடனே ஒதுக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து இக்குழுவினர் உக்கடம் மேம்பாலம் கட்டுமான பணிகள், மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி, மாவுத்தம்பதியில் மகாளிப்பாறை பழங்குடியினர் பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்தனர்.

இதில் குழு உறுப்பினர்களும் எம்எல்ஏக்களுமான அக்ரிகிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஈஸ்வரன், சரஸ்வதி, நத்தம் விஸ்வநாதன், மதியழகன், அம்மன் கே அர்ஜுனன், மார்க்கண்டேயன், சட்டப்பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

The post சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவினர் கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: