கொல்லிமலை அருவிகளில் கொட்டும் தண்ணீர்-சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடுகிறது

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் பெய்து வரும் கனமழையால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கொல்லிமலையில் வறண்டு கிடந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து தொடங்கியது. தளர்வுகள் அறிவித்து கொல்லிமலைக்கு பொது போக்குவரத்து தொடங்கிய போதிலும், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. நேற்று முன்தினம் இரவு, கொல்லிமலையில் பலத்த மழை செய்தது. சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக, கொல்லிமலையில் வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் முழுவதும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்வதால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் நுங்கும், நுரையுமாக செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதேபோல் மாசிலா அருவி, நம்ம அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கொல்லிமலை முழுவதும் குளிர் காற்று வீசுவதால், சீதோஷ்ண நிலை மாறி, கடும் குளிர் நிலவி வருகிறது. மழையின் காரணமாக அப்பகுதியில் மிளகு, காபி, மரவள்ளி, கமலா ஆரஞ்சு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

The post கொல்லிமலை அருவிகளில் கொட்டும் தண்ணீர்-சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: