கொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயிலில் இனி டோக்கனுக்கு பதில் டிக்கெட்: அதிகாரி தகவல்’

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் நடைமுறையை மாற்றி க்யூ-ஆர் கோடு பொறித்த காகித டிக்கெட் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இச்சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 லட்சம் வரையில் காணப்படும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக்கால் ஆன டோக்கன்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த டோக்கன்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். டோக்கன்களை அதற்குறிய உள்நுழையும் இயந்திரத்தில் காண்பித்தால் மட்டுமே பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியும். எனவே, கொரோனா பரவலை தடுக்க சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் டோக்கன் நடைமுறையை மாற்றி க்யூ-ஆர் கோடு பொறிக்கப்பட்ட காகித டிக்கெட் நடைமுறையை கொண்டுவர மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நிலையத்தில் இருந்து வெளியேறவும், உள்நுழையவும் இந்த டிக்கெட் பயன்படும். இதனால், ஒருவர் பயன்படுத்திய டிக்கெட்டை வேறு ஒருவர் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் நிறுவப்படும் பணி விரைவில் தொடங்கும் என மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post கொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயிலில் இனி டோக்கனுக்கு பதில் டிக்கெட்: அதிகாரி தகவல்’ appeared first on Dinakaran.

Related Stories: