கஞ்சா கடத்தி வந்தவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

ஓமலூர், செப்.8: ஓமலூர் பஸ் நிலையத்தில், கடந்த மே 30ம்தேதி, அரசு பஸ்சில் இருந்து இறங்கிய 3 பேர், சந்தேகப்படும்படி ஒரு பையை எடுத்துச் சென்றனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை செய்த போது, அந்த பையில் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது குறித்து ஓமலூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் (பொ) செல்வராஜன் நடத்திய விசாரணையில், அவர்கள் சங்ககிரி தாலுகா அரசிராமணியை சேர்ந்த ஆனந்த் (எ)ஆனந்தராஜ், பூபதிராஜா, தாதகாப்பட்டியைச் சேர்ந்த பூபதி என தெரியவந்தது. மேலும், ஆனந்தராஜ், ஆந்திராவில் இருந்து பலமுறை கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததும், அவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இவர் ஆட்களை வைத்து, ஆந்திராவில் இருந்து பஸ்களில் கஞ்சா கடத்தி வந்து ஓமலூர், இடைப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஓமலூர் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, டிஎஸ்பி சென்னகேசவன் ஆகியோர், எஸ்பி அருண் கபிலனிடம் கேட்டுக்கொண்டனர். அவர் கலெக்டருக்கு பரிந்துரை செய்ததையடுத்து, ஆனந்தராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். ஆனந்தராஜ் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அதற்கான உத்தரவை அவரிடம் நேற்று வழங்கினர்.

The post கஞ்சா கடத்தி வந்தவர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: