நீட் வினாத்தாள் கசிவால் பலியான மாணவர்களுக்கு காந்தி நினைவகத்தில் இந்தியா கூட்டணி அஞ்சலி: ராகுல் தலைமையில் எம்பிக்கள் பேரணி

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் காந்தி நினைவகத்திற்கு சென்றனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் ராஜினாமா செய்யக்கேட்டு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இல்லத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பிற தலைவர்கள் காந்தி நினைவகம் அமைந்துள்ள டீஸ் ஜனவரி மார்க் பகுதியை நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு செல்லவிடாமல் தடுப்பதற்காகச் சுனேரி பாக் சாலையில் காவல்துறை தடுப்புகளை அமைத்தது. இருப்பினும், பின்னர் காவல்துறை தடுப்புகளை அகற்றி, ராகுல் காந்தி மற்றும் பிற எம்.பி.க்களை முன்னோக்கிச் செல்ல அனுமதித்தது.

அவர்கள் சுனேரி பாக் சாலையின் முடிவை அடைந்து அமித் ஷாவின் இல்லத்திற்கு அருகில் சென்றபோது, ​​காவல்துறை அவர்களைத் தடுத்தது. அப்பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதைத் தடை செய்யும் பிஎன்எஸ் பிரிவு 163 அமலில் இருப்பதால், அங்கு கூட அனுமதி இல்லை என்று காவல்துறை கூறியது. இருப்பினும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்பிக்களை ‘டீஸ் ஜனவரி மார்க்’ பகுதியை நோக்கிச் செல்ல காவல்துறை அனுமதி அளித்தது. அங்கு அவா்கள் காந்தி நினைவகத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

* மாணவர்களுக்காக நாங்களும் வீதிக்கு வருவோம்
இதுபற்றி ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’ இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் தலைவர்களும் ‘டீஸ் ஜனவரி மார்க்’கில் உள்ள காந்தி ஸ்மிருதிக்கு அமைதியான முறையில் சென்று கொண்டிருக்கிறோம். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பிறகு தற்கொலை செய்துகொள்ளத் தள்ளப்பட்ட மாணவர்களை – நாம் இழந்த அந்தச் சிறார்களை – நினைவுகூரவே நாங்கள் செல்கிறோம்.

மேலும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அமைதியான முறையில் கோரியதற்காகத் தாக்கப்பட்டு, காயமடைந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவாக நிற்கவும் நாங்கள் செல்கிறோம். இந்தியாவின் மாணவர்கள் தனித்து விடப்படவில்லை. ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது. மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடும்போது, ​​நாங்களும் வீதிகளுக்கு வர வேண்டும் என்று நாங்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருதினோம்’ என்று பதிவிட்டார்.

Related Stories: