புழல்: தனியார் தண்ணீர் கம்பெனியில் போர்போடும்போது தண்ணீர் கொப்பளித்து வெளியேறியதால் பிரபல பிரியாணி தயாரிக்கும் கம்பெனி சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்தது. சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதி கார்டன் சாலையில் பிரபல தனியார் பிரியாணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாலை இந்த தொழிற்சாலையின் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடிநீர் கம்பெனியில் ராட்சத போர் அமைத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதற்காக போர் போடும்போது மணலில் இருந்து தண்ணீர் கொப்பளித்து பீய்ச்சியடித்து வெளியேறி அங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றி தண்ணீர் தேங்கியது. இதன்காரணமாக அலமாதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில், தேங்கி நின்ற தண்ணீரால் நேற்றிரவு பிரியாணி தயாரிக்கும் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் சரிந்துவிழுந்து தொழிற்சாலைக்குள் மணல் கலந்த நீர் புகுந்துவிட்டது. அந்த சமயத்தில் அப்பகுதியில் ஊழியர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பிரியாணி தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ‘’அலமாதி பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து விசாரித்து அலமாதி ஊராட்சி நிர்வாகம், சோழவரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்தனர்.
