கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு: 1 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பி மற்றும் சிக்னல் கோளாறு காரணமாக நேற்று சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி என அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நின்றது.

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த ரயில்களும் ஆங்காங்கே ஒன்றன்பின் ஒன்றாக நின்றன. புறநகர் ரயில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு புறப்பட தாமதமானதால் ரயிலில் இருந்து பலர் தண்டவாளத்தில் இறங்கி பேருந்து மற்றும் ஆட்டோவில் செல்வதற்காக நடந்தே சென்றனர்.

இதை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் இயங்க தொடங்கின. இதனால் அலுவலகம் செல்வோர், மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் என ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related Stories: