சிவகிரி: மரத்தில் கார் மோதியதில் தாத்தா, பேரன், பேத்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விருதுநகர் மாவட்டம், சேத்தூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (51). அதே ஊரில் ‘பாஸ்ட் புட்’ கடை வைத்துள்ளார். இவரது மகள் பிரியதர்ஷனி-செந்தில் மகள் கிருத்திகா (10), மகன் ஹரிஷ் கைலாஷ் (7). நேற்று பிரியதர்ஷனிக்கு பிறந்தநாள் விழா நடந்தது. இதை வேலுச்சாமி மற்றும் குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது ‘பாஸ்ட்புட்’ கடையில் சிலிண்டர் காலியாகி விட்டதாக கடை பணியாளர் கூறவே, தனது நண்பர் சிவகிரியைச் சேர்ந்த முனியாண்டி (40) என்பவரது வீட்டுக்கு சென்று ‘சிலிண்டர்’ எடுத்து வருவதாகக் கூறி வீட்டிலிருந்து காரை எடுத்துள்ளார்.
இதனிடையே தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் இரவில் தூங்காமல் இருந்த பேத்தி கிருத்திகா, பேரன் ஹரிஷ் கைலாஷ் ஆகியோரும் காரில் செல்லும் உற்சாகத்தில் தாத்தாவுடன் புறப்பட்டனர். அவருடன் உறவினர்களான ராணுவ வீரர் வசந்த் (23), முனியாண்டி (40) ஆகியோரும் காரில் ஏறினர். முனியாண்டி வீட்டுக்கு சென்று சிலிண்டரை எடுத்துக் கொண்டு, அவரை அங்கேயே விட்டுவிட்டு வருவது தான் வேலுச்சாமியின் திட்டமாக இருந்தது. இதையடுத்து சிவகிரிக்கு நள்ளிரவு 1 மணி அளவில் கார் புறப்பட்டது. காரை வேலுச்சாமி ஓட்டினார்.
சிவகிரி ‘செக் போஸ்ட்’ அருகே கார் சென்றபோது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை விட்டு இறங்கி அங்கிருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. விபத்து நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் நீண்ட நேரம் விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதிகாலை 2 மணி அளவில் அந்த வழியாக வந்த லாரி டிரைவர், மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளாகி கிடப்பதை பார்த்து, சிவகிரி செக் போஸ்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று காரின் கதவுகளை உடைத்து பார்த்த ேபாது வேலுச்சாமி, பேத்தி கிருத்திகா, பேரன் ஹரிஷ் கைலாஷ் ஆகியோர் உயிரிழந்தது, தெரியவந்தது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வசந்த்தை மீட்டு ராஜபாளையம் தனியார் மருத்துவமனைக்கும், முனியாண்டியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
