கேரளாவில் பன்றி காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

 

போடி: கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 17 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் காரணமாக நோய் பரவ வாய்ப்புள்ளது.

தேனி மாவட்டத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் தினமும் பணி நிமித்தமாக போடி அருகே போடிமெட்டு, கம்பம் மெட்டு, ராமக்கல் மெட்டு, குமுளி வழியாக கேரளா செல்கின்றனர். இதுதவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களானது லாரிகள், சரக்கு வாகனங்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழ்நாடு – கேரள இடையே அரசு பஸ்களும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழக எல்லைப்பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து போடி பகுதி மக்கள் கூறுகையில், ‘போடிமெட்டு, கம்பம் மெட்டு, குமுளி போன்ற பகுதிகளுக்கு அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் இந்நோய் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் இருந்து தினமும் ஏராளமானோர் தமிழகம் வந்து ெசல்கின்றனர்.

தமிழக தொழிலாளர்களும் அங்கு வேலைக்கு செல்கின்றனர். எனவே, கேரள – தமிழக எல்லை பகுதியில் மாவட்ட சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து சுகாதார நடவடிக்கைளை தீவிரப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: