பட்டுக்கோட்டையில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு நூதன விழிப்புணர்வு!

 

தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இன்று போக்குவரத்து பிரிவு போலீசார் 1 கிலோ தக்காளி வழங்கி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒவ்வொரு நாளும் தலைக்கவசம் அணிந்து வந்தால் வெவ்வேறான பரிசுகள் வழங்கப்படும் என வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்திய போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ. இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்‌. அதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். எனவே இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஒவ்வொருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ ஆறுமுகம் இன்று வாகன ஓட்டிகளுக்கு நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பட்டுக்கோட்டையின் இதயப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு 1 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினார்.

மேலும் சாலைகளில் வந்த வாகன ஓட்டிகளிடம், நீங்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இதேபோல் ஒவ்வொரு நாளும் நீங்கள் தலைக்கவசம் அணிந்து வந்தால் வெவ்வேறான பரிசுகள் உங்களுக்கு வழங்கப்படும் என்று வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

Related Stories: