மாண்ட்வில்: அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நடிகையின் மகள் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘ரியல் ஹவுஸ்வைவ்ஸ் ஆப் நியூஜெர்சி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடிகை தெரசா கிடிஸின் மகள் மிலானியா (20), கடந்த 2009ம் ஆண்டு முதல் தனது தாயுடன் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து தோன்றி வருகிறார். தற்போது தம்பா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு துறை மாணவியாக இருக்கும் இவர், பொதுவெளியில் தனது தாய் குறித்து அவ்வப்போது நெகிழ்ச்சியான பதிவுகளைப் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், நியூஜெர்சியில் உள்ள மாண்ட்வில் டவுன்ஷிப் போலீசார், மிலானியாவை அதிரடியாக கைது செய்தனர். மற்றவர் மீது தெரிந்தே உடல் ரீதியான காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு என்பதால் பாதிக்கப்பட்ட நபர் குறித்த விபரங்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முதல் விசாரணை நடந்த நிலையில், வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, ‘யாரையும் தாழ்வாகப் பார்க்கக் கூடாது; பணிவுடன் இருக்க வேண்டும்’ என்று மிலானியா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
