முட்டை கோழிப்பண்ணை அமைக்க மக்கள் எதிர்ப்பு: தாசில்தார் அலுவலகம் முற்றுகை

காங்கயம், ஜூன் 11: காங்கயம் அருகே முட்டை கோழி பண்ணை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காங்கயம் தாலுகா, முதலிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனம், வணிக ரீதியான முட்டை கோழிப்பண்ணையை அமைப்பதற்கான முன்னேற்பாடு வேலைகளை செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலிபாளையம் கிராமம், தென்னங்காரைபாளையம் பகுதி பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காங்கயம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தாசில்தார் கதிர்வேலுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:முதலிபாளையம் கிராமத்தில் முட்டை கோழி பண்ணை அமைத்தால் பொதுமக்களின் உடல்நலத்திற்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் படும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், அங்கு வெளியேறும் கோழிக்கழிவுகள், எச்சங்களால், ஈக்கள் தொல்லை அதிகரிக்கும், நிலத்தடிநீர் பாதிக்கும். இதனை பொதுமக்கள் நலன் கருதி நிரந்தரமாக தடுத்து நிறுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட தாசில்தார் கதிர்வேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர் கலைந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள், எம்எல்ஏ நடராஜை சந்தித்து மனு அளித்தனர்.

Related Stories: