திருவனந்தபுரம்,ஜூன் 8: கேரளத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஏனைய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 4 நாட்களுக்கு கேரளம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட 6 மாவட்டங்களுக்கும், 9ம் தேதி கோட்டயம், இடுக்கி, பாலக்காடு உள்பட 6 மாவட்டங்களுக்கும், 10ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்பட 5 மாவட்டங்களுக்கும் 11ம் தேதி கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மலையோரப் பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
