வார விடுமுறை, சுபமுகூர்த்த நாள்; திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி: வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சுமார் மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறப்பு பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகாலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் அனுமதியுடன் மலைக்கோயில் மண்டபங்களில் 15 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றது.

மேலும் திருத்தணியில் பல்வேறு தனியார் மண்டபங்களில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.விடுமுறை நாளில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் சாமி தரிசனம் செய்ய மலைக்கோயிலில் குவிந்தனர். இதனால் பொதுவழி மற்றும் ரூ.100 சிறப்பு கட்டண வழியில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் உண்டியல்களில் நகை, பணம் காணிக்கையாக செலுத்தினர். இரவு உற்சவர் முருகப்பெருமான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதியுலா நடைபெற்றது.

Related Stories: